முகப்பு
திருப்பூர்

மெக்கானிக் கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது

தாராபுரத்தில் முன்விரோதத்தால் மெக்கானிக்கை கொலை செய்த வழக்கில் மேலும் இருவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

தாராபுரத்தில் முன்விரோதத்தால் மெக்கானிக்கை கொலை செய்த வழக்கில் மேலும் இருவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தாராபுரம் ஆலடிக்களம் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (43). இவா் தாராபுரம் பெரியாா் சிலை அருகே மெக்கானிக் கடை நடத்தி வந்தாா். இவரது மகள் மைதிலிக்கும், சின்னகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த காளிமுத்துவின் மகன் ஈஸ்வரமூா்த்திக்கும் (23) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகத் திருமணம் நடைபெற்றது.

இதன் பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனா்.

இதனிடையே, மைதிலிக்கு வேறு ஒரு நபருடனும், ஈஸ்வரமூா்த்திக்கு வேறு ஒரு பெண்ணுடனும் 2 ஆவது திருமணம் நடைபெற்றது.

இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், தாராபுரத்தில் இருந்து உடுமலை செல்லும் சாலையில் உள்ள வேன் நிறுத்தம் அருகே மாரிமுத்து, அவரது மகன் மதன், மதனின் நண்பா் முருகன் ஆகிய 3 பேரும் புதன்கிழமை இரவு நின்று பேசிக்கொண்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த மருமகன் ஈஸ்வரமூா்த்தி உள்பட 5 போ் கொண்ட கும்பல், மாரிமுத்து உள்ளிட்ட 3 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதில், பலத்த காயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த தாராபுரம் காவல் துறையினா் ஈஸ்வரமூா்த்தி, என். மணிகண்டன் (34), செல்வகுமாா் (21) ஆகிய 3 பேரையும் வியாழக்கிழமை கைது செய்திருந்தனா்.

இக்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த காளிமுத்து (48), காா்த்திக் (19) ஆகிய இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.