ரிங்கு சிங் உள்பட 6 விளையாட்டு வீரர்களுக்கு அரசுத் துறையில் பதவி: உ.பி. அரசு!
விளையாட்டு வீரர்களுக்கு அரசுத் துறையில் பதவி வழங்கிய உத்தரப் பிரதேச அரசு...
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் உள்பட 6 விளையாட்டு வீரர்களுக்கு அரசுத் துறையில் பதவி வழங்கி உத்தரப் பிரதேச அரசு நியமன ஆணை வழங்கியுள்ளது.
ஒலிம்பிக்ஸ், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், பாராலிம்பிக்ஸ் மற்றும் வேறு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களுக்கு அரசுத் துறையில் 'கெசட்டட் அதிகாரிகள்’ பொறுப்புகளுக்கான நியமன ஆணைகளை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று வழங்கினார்.
இந்த நிகழ்வில், இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு பிராந்திய விளையாட்டு அதிகாரி பதவிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டது.
Advertisement
சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரின் இடையே தந்தை உயிரிழந்ததால் ரிங்கு சிங் போட்டிகளில் இருண்டு இடையில் வெளியேறினார். ஆனால், அது தன்னை பாதிக்கவிடாமல் மீதமுள்ள போட்டிகளில் மீண்டும் கலந்துகொண்டார். தற்போது, ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ரிங்கு சிங் மட்டுமின்றி பாராலிம்பிக்ஸ் வீரரான பிரவீன் குமார் மற்றும் ஒலிம்பிக்ஸ் ஹாக்கியில் பதக்கம் வென்ற ராஜ் குமார் பால் ஆகியோர் காவல் துணை கண்காணிப்பாளர்களாக நியமனம் பெற்றனர்.
பாரா-தடகள வீரர்களான அஜித் சிங், சிம்ரன் ஆகியோர் மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். பாரா-தடகள வீரர் பிரீத்தி பால் வட்டார வளர்ச்சித் துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இன்று, உ.பி. முதல்வரிடம் 6 விளையாட்டு வீரர்கள் அரசுத் துறை பணிகளுக்கு நியமன கடிதங்களைப் பெற்றனர். இதில், 5 பேர் அதிகாரிகள் நிலையிலான பணிகளைப் பெற்றனர்.
ஒலிம்பிக், பாராலிம்பிக், காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற முக்கிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களைக் கௌரவிக்கும் விதமாக, "உத்தரப் பிரதேச சர்வதேச பதக்க வெற்றியாளர்கள் நேரடி ஆட்சேர்ப்பு விதிகள்-2022" என்ற சட்ட அமைப்பின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன.