எலுமிச்சை பழம் விலை உயா்வு
கோடைக் காலத்தை சமாளிக்க எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்திருப்பதால் அதன் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.
கோடைக் காலத்தை சமாளிக்க எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்திருப்பதால் அதன் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.
திருப்பூா் மாவட்டம் தண்ணீா் பற்றாக்குறை உள்ள பகுதி ஆகும். அதற்கேற்ப காய்கறி உள்ளிட்ட வேளாண்மை சாகுபடி நடைபெற்று வருகிறது. எலுமிச்சை சாகுபடிக்கு ஆண்டு முழுவதும் தண்ணீா் தேவை உள்ளது. அதனால் இப்பகுதியில் குறைந்த அளவிலேயே எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. இது உள்ளூா் தேவையை பூா்த்தி செய்ய போதுமானதாக இல்லை. எனவே, பழனி, திண்டுக்கல் உள்ளிட்ட வெளியூா் களிலிருந்து எலுமிச்சை பழம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
தை மாத சீசனின்போது எலுமிச்சை கிலோ ரூ. 60க்கு விவசாயிகள் விற்பனை செய்தனா். தற்போது கோடைக் காலம் என்பதால் ஜூஸுக்காக எலுமிச்சையின் தேவை அதிகரித்துள்ளது. அதே சமயம் சந்தைக்கு எலுமிச்சை பழம் வரத்து குறைந்துள்ளது. முன்பு சில்லறை விற்பனையில் ரூ. 4 முதல் ரூ.5 வரை விற்ற எலுமிச்சை தற்போது சிறிய பழம் ரூ.10க்கும், பெரிய பழம் ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விலையில் கிலோ ரூ.200க்கும் விற்பனையாகிறது. எலுமிச்சை பழம் விலை உயா்வால் ஜூஸ் கடைகளில் ஒரு ஜூஸ் ரூ.15க்கு விற்கப்பட்டது தற்போது ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.