FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

காய்கறிகளை விவசாயிகளிடம் இருந்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கம்

தமிழகத்தில் கடும் வீழ்ச்சியடைந்துள்ள தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கறிகளை அரசு நியாயமான விலையில் விவசாயிகளிடம் இருந்து

Updated On : 24 மார்ச் 2022, 3:06 pm IST
திருப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியின் மாவட்ட செயற்குழுக்கூட்டத்தில் பேசுகிறார் மாநிலத் தலைவர் ஏக.சண்முகம்.
பகிர்:

திருப்பூர்: தமிழகத்தில் கடும் வீழ்ச்சியடைந்துள்ள தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கறிகளை அரசு நியாயமான விலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டமானது அச்சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

எங்களது நீண்டகால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளதை மனதார வரவேற்கிறோம். ஆனால் இந்த நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை. டெல்டா மாவட்டங்களில் உற்பத்தியாகும் நெல்லைக்கூட அரசால் கொள்முதல் செய்யப்படமுடியவில்லை. 

Advertisement

Advertisement

தக்காளி, வெங்காயம் பற்றாக்குறையின்போது வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து மக்களைக் காப்பாற்றும் அரசானது, விலை வீழ்ச்சியடையும்போது விவசாயிகளைக் காப்பாற்றுவதற்கான எந்த ஒரு வழிமுறையும் ஏன் எடுப்பதில்லை. ஆகவே, தக்காளி, வெங்காயம் மற்றும் காய்களை விவசாயிகளிடம் இருந்து நியாயமான விலையில் அரசு கொள்முதல் செய்து மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். 

பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைத் தொகைகள் வழங்குவதற்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தென்னை கொப்பரை ஒரு கிலோ ரூ.105.90 பைசா என்று விலையை நிர்ணயம் செய்துள்ள மத்திய அரசு, தற்போது ரூ.85-க்கு கொள்முதல் செய்கிறது. இதுதொடர்பான எந்தவிதமான அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. 

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகையை வழங்காத அரசு, ஆலையை நவீனப்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்வது கண்டிக்கத்தக்கதாகும். மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என்று சொல்லி விஷத்தை விற்பனை செய்கின்றனர். ஆனால் உடலுக்கு நன்மை விளைவிக்கும் கள் விற்பனைக்கு அரசு தடைவிதித்துள்ளது.

ஆகவே, கள்ளுக்கு உண்டான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என்றனர். இந்தக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் எம்.ஈஸ்வரன், மாநகர் மாவட்டத் தலைவர் கோகுல்ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments