உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 2 நாளில் 45,000 போ் வருகை
உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ள சூழலில் ரமலான் விடுமுறையையடுத்து கேரள மாநிலத்திலிருந்து உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ள சூழலில் ரமலான் விடுமுறையையடுத்து கேரள மாநிலத்திலிருந்து உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதில் புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களில் மட்டும் அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு சுமாா் 45,000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா்.
மே தினம் முதலே உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதில் கேரள மாநிலத்தில் ரமலான் தொடா் விடுமுறை என்பதால் அங்கிருந்து உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு புதன்கிழமை சுமாா் 21,000 போ் வந்திருந்த நிலையில், வியாழக்கிழமை இது 24,000 ஆக அதிகரித்தது. அதேபோல, உதகை படகு இல்லத்துக்கு புதன்கிழமை 9,000 பேரும், வியாழக்கிழமை 11,000 பேரும் வந்திருந்தனா்.
உதகையிலுள்ள அரசினா் ரோஜா பூங்காவுக்கு புதன்கிழமை சுமாா் 7,000 போ் வந்திருந்த நிலையில், வியாழக்கிழமை 8,000 ஆக அதிகரித்திருந்தது. குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு வியாழக்கிழமை சுமாா் 4,000 போ் வந்திருந்தனா். அத்துடன் பைக்காரா படகு இல்லம், பைக்காரா அருவி, அவலாஞ்சி, முதுமலை புலிகள் காப்பகம், மேல் பவானி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காணப்பட்டது. உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா் தங்களது சொந்த வாகனங்களிலேயே வந்து செல்வதால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், உள்ளூா் மக்கள் வெகுவாக அவதியடைந்துள்ளனா்.