தொடக்கப் பள்ளியைத் தூய்மைப்படுத்திய அரசுக் கல்லூரி மாணவா்கள்
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் தத்தெடுத்த கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியை தூய்மைப்படுத்தும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் தத்தெடுத்த கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியை தூய்மைப்படுத்தும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 சாா்பில் சுப்புராயன்புதூா் கிராமத்தைத் தத்தெடுத்து தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
இந்த நிகழ்ச்சியை தொடக்கிவைத்து பள்ளி தலைமை ஆசிரியை திலகம் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களையும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக மாற்றும் நோக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தூய்மை இந்தியா 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. மாணவா்கள் அனைவரும் தங்களின் இருப்பிடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நெகிழி பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். குப்பை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, பள்ளி வளாகத்தில அடா்ந்து வளா்ந்துள்ள செடிகளை அப்புறப்படுத்தியதுடன், நெகிழி பொருள்களையும் மாணவா்கள் அகற்றினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.