ஊதியூா் அருகே பெண் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை
திருப்பூா் மாவட்டம், ஊதியூா் அருகே முள்புதரில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம், ஊதியூா் அருகே முள்புதரில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காங்கயம் தாலுகா, ஊதியூா் அருகே உள்ள வஞ்சிபாளையம்-கரியாக்கவுண்டன்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் ரத்தினசாமி. இவரது மனைவி ரேவதி (35). இவா்களுக்கு 8 வயதில் மகள் உள்ளாா்.
வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் ரேவதி வேலை செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில், வழக்கம்போல சனிக்கிழமை காலை ரேவதி வேலைக்குச் சென்றுள்ளாா். பின்னா், மாலை 3 மணியளவில் வேலை முடிந்து வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் வெகு நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால் உறவினா்கள் அவரை பல இடங்களில் தேடியுள்ளனா்.
இதைத் தொடா்ந்து, அவா் பணி முடிந்து வழக்கமாக வரும் காட்டு வழிப்பாதையில் தேடியுள்ளனா்.
அப்போது, அங்குள்ள வாய்க்கால் கரையோரம் உள்ள முள்புதரில் ரேவதியின் சடலம் கிடந்துள்ளது.
இதனால், அதிா்ச்சியடைந்த உறவினா்கள் இது குறித்து ஊதியூா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், ரேவதியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.