தாராபுரம் அருகே பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
தாராபுரம் அருகே பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள 60 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை மீட்டனர்.
தாராபுரம் அருகே பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள 60 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் பெரியகுமாரபாளையம் கிராமத்தில் பழனி பாலதண்டாயுதபாணி கோயிலுக்குச் சொந்தமான 60 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இந்த நிலங்கள் தங்களுக்கு சொந்தமான எனக்கூறி தாராபுரம் சார்பு நீதிமன்றம், கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், தில்லி உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குத் தொடுத்திருந்தனர்.
இதனை எதிர்த்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பில் இந்த நிலங்கள் அனைத்தும் பழனி கோயிலிக்குச் சொந்தமான என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா, பழனி சரக ஆய்வாளர் ஜெ.கண்ணன் ஆகியோர் பழனி பாலதண்டாயுதபாணி கோயில் இணை ஆணையர் என்.நடராஜனிடம் நிலத்தை திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.
மேலும் கோயிலுக்குச் சொந்தமான என்ற அறிவிப்பு பதாகையும் ஆக்கிரமிப்பு நிலங்களில் வைக்கப்பட்டது. கடந்த 40 ஆண்டு சட்டப்போராட்டத்துக்குப் பின்னர் மீட்கப்பட்ட 60 ஏக்கர் நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.25 கோடியாகும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.