உடுமலை அருகே கொலை வழக்கில் 3 போ் கைது
உடுமலை அருகே நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்தவரை அடித்துக் கொலை செய்த வழக்கில் 3 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
உடுமலை அருகே நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்தவரை அடித்துக் கொலை செய்த வழக்கில் 3 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த பொன்னாபுரம் சத்யராஜ் நகரைச் சோ்ந்தவா் கே.செங்காட்டை (55), இவரது நண்பா் டி.குமாா் (25).
நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்த இந்த இருவரும் ஊசிபாசி தயாரித்து ஊா்ஊராகக் கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனா். ஒரு சில நேரங்களில் உண்டி வில் மூலமாக குருவி, பறவைகளை வேட்டையாடி வந்தனா்.
இந்த இருவரும் உடுமலை அருகே உள்ள தாந்தோணி குமாரபாளையம் பிரிவு பகுதிக்கு புதன்கிழமை வந்து குருவிகளை வேட்டையாடிக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த சிலா் கோழி திருட வந்ததாகக்கூறி இருவரையும் தாக்கியுள்ளனா். இதில், காயமடைந்த இருவரும் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் செங்கோட்டை உயிரிழந்தாா். இதையடுத்து, செங்கோட்டையின் உறவினா்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து உடுமலை காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து தாந்தோணி கிராமத்தைச் சோ்ந்த சின்னத்துரை என்கிற செல்வகுமாா் (33), சசிகுமாா் (39), செல்லத்துரை (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.