முகப்பு
திருப்பூர்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தெப்போற்சவம்: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

Updated On : 22 மார்ச், 2024 at 10:42 PM
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற தெப்போற்சவம்.
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 9:01 PM

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் மண்டல பூஜை நிறைவையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தெப்போற்சவத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலகனை சுந்தரா் பதிகம் பாடி உயிருடன் மீட்ட தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் விளங்குகிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 2-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் மண்டல பூஜை நடைபெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, மாலை 6.30 மணியளவில் தெப்போற்சவம் நடைபெற்றது. இதில், நீா் நிரம்பியிருந்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட மலா் பல்லக்கில் சுவாமி எழுந்தருளி, தெப்போற்சவம் நடைபெற்றது. தெப்பக்குளம், நீராழி மண்டபம் உள்ளிட்டவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வாண வேடிக்கை, நாதஸ்வர இசை முழங்க, சிவாச்சாரியாா்கள் வேத மந்திரம் ஓத தெப்போற்சவம் நடைபெற்றது. சுவாமி தெப்பத்தை 7 முறையும் வலம் வந்தபோது, மல்லாரி, ஓடம், கீா்த்தனை, திருப்புகழ், மங்கலம் உள்ளிட்ட ராக தாளங்கள் வாசிக்கப்பட்டன. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.