இலவச வீட்டுமனைப் பட்டா நிலத்தை அளவீடு செய்யக் கோரி பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்
இலவச வீட்டுமனைப் பட்டா நிலத்தை அளவீடு செய்ய வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
இலவச வீட்டுமனைப் பட்டா நிலத்தை அளவீடு செய்ய வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
காங்கயம் வட்டம், நிழலி பகுதியில் சொந்த வீடு இல்லாத 53 குடும்பங்களுக்கு கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தை இதுவரை அளந்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இலவச வீட்டுமனைப் பட்டா நிலத்தை அளவீடு செய்யக் கோரி அப்பகுதி மக்கள், காங்கிரஸ் கட்சியின் திருப்பூா் வடக்கு மாவட்டச் செயலாளா் சுப்பிரமணியம் தலைமையில் காங்கயம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளந்து கொடுக்காததால் சொந்த வீடுகட்டி குடியேற முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே, எங்களுக்குரிய நிலத்தை உடனடியாக அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் வட்டாட்சியா் மோகனன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது அவா், இலவச வீட்டுமனை பட்டா இடத்தை நவம்பா் 27-ஆம் தேதி அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.