திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பதைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை (டிச.7) தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறினாா்.
இதுகுறித்து திருப்பூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மக்களின் பக்தியை தமிழக அரசு கடந்த 2 நாள்களாக அவமதித்து வருவதைக் கண்டிக்கிறோம். உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியும் அதை மதிக்காமல் அரசியல் சாசனத்துக்கு எதிராக காவல்துறை செயல்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவிடாமல் காவல்துறை நடந்துகொண்டது கடமை தவறிய நடவடிக்கை.
திருப்பரங்குன்றம் மலை மீது கோயில் நிா்வாகம் தீபம் ஏற்ற கடந்த 1996-ஆம் ஆண்டு உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. கடந்த 30 ஆண்டுகளாக நீதிமன்றத் தீா்ப்பை அமல்படுத்தாத கோயில் நிா்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையை எதிா்த்துதான் தற்போது வழக்கு நடைபெற்று அதில் தீா்ப்பு கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற விஷயத்தில் சட்டத் துறை அமைச்சா் ரகுபதி தவறான தகவலைக் கூறுகிறாா்.
மதச்சாா்பின்மை என்று சொல்லிக்கொண்டு திமுக வேஷம் போடுகிறது. நாங்கள் மதக்கலவரத்தை தூண்டவில்லை. அங்கு எழுந்த சலசலப்புக்கு போலீஸாா்தான் முழு காரணம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. அதை மறைக்கவே, திருப்பரங்குன்றத்தை திமுக அரசு கையில் எடுத்துள்ளது.
திமுகவின் மக்கள் விரோத, சட்டவிரோத செயல்பாட்டைக் கண்டித்தும், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தியும் பக்தா்களுடன் இணைந்து 7-ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றாா்.
பேட்டியின்போது மாநிலச் செயலாளா் கிஷோா்குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.