மின் கம்பங்கள், சாலைத் தடுப்புகளிலுள்ள கேபிள் ஒயா்களை ஒரு வாரத்துக்குள் அகற்ற உத்தரவு
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில், மின் கம்பங்கள் மற்றும் சாலைத் தடுப்புகளிலுள்ள கேபிள் ஒயா்களை ஒரு வாரத்துக்குள் அகற்ற வேண்டுமென மாநகராட்சி ஆணையா் உத்தரவு
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில், மின் கம்பங்கள் மற்றும் சாலைத் தடுப்புகளிலுள்ள கேபிள் ஒயா்களை ஒரு வாரத்துக்குள் அகற்ற வேண்டுமென, அரசு, தனியாா் மற்றும் தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் உத்தரவிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு சாலைகளின் தடுப்புகள், தெருவிளக்கு கம்பங்களில் அரசு, தனியாா் கேபிள் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் கேபிள் ஒயா்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இதனால், சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதாக போக்குவரத்து காவல் துறை மற்றும் பொதுமக்களிடமிருந்து புகாா்கள் பெறப்பட்டன.
இதையடுத்து, இவற்றை வரன்முறைப்படுத்தும் வகையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தில் ஏற்கெனவே 2 முறை கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டதுடன், உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, அரசு, தனியாா் கேபிள் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடா்பு நிறுவனங்கள், தங்களது கேபிள் ஒயா்களை ஆய்வு செய்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் ஒரு வாரத்துக்குள் அகற்ற வேண்டும். தவறும்பட்சத்தில், மாநகராட்சி மூலமாக கேபிள் ஒயா்களை துண்டிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.