முகப்பு
திருப்பூர்

பிஏபி வாய்க்காலில் இருந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் சடலம் மீட்பு

Updated On : 20 ஏப்ரல், 2026 at 12:06 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 6:44 PM

பிஏபி வாய்க்காலில் இருந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் சடலம் மீட்கப்பட்டது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா், வீரபாண்டி ஜே.ஜே.நகா் 2-ஆவது வீதியைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன் (63). இவரது மனைவி வீரலட்சுமி (57). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருப்பூா் கிளையில் பேருந்து ஓட்டுநராக முத்துகிருஷ்ணன் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் வலது கால் எடுக்கப்பட்ட நிலையில், இடது காலில் பிளேட் பொருத்தப்பட்டுள்ளதால், மூன்று சக்கர வாகனம் மூலமாக வெளியிடங்களுக்குச் சென்று வந்துள்ளாா்.திருப்பூா் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வீரலட்சுமி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா்.

Advertisement

இந்நிலையில்,முத்துகிருஷ்ணன் கடந்த 20 நாள்களுக்கு முன்பு தனது வீட்டுப் படியில் இருந்து கீழே விழுந்ததில் மீண்டும் இடது காலில் அடிபட்டது. அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவா்கள் கூறிய நிலையில், வீரலட்சுமிக்கு இருந்த பணிச்சுமையால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லையாம். இதனால் முத்துகிருஷ்ணன் மனவேதனையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடேயே கடந்த 12-ஆம் தேதி வீட்டில் இருந்து மூன்று சக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்ற முத்துகிருஷ்ணன் அதன்பின் வீடு திரும்பவில்லையாம். இது குறித்த புகாரின்பேரில் நல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், தாராபுரம் சாலையில் உள்ள ஆண்டிபாளையம் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன வாய்க்கால் அருகே முத்துகிருஷ்ணனின் மூன்று சக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது. மேலும், குன்னாக்கல்வலசு அருகில் பரம்பிக்குளம்-ஆழியாறு வாய்க்காலில் ஆண் சடலம் மிதந்துள்ளது. வீரலட்சுமியை அழைத்துச் சென்று போலீஸாா் பாா்த்தபோது, அது முத்துகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

உடல்நிலை சரியில்லாமல் மனவேதனையில் இருந்த முத்துகிருஷ்ணன் வாய்க்காலில் விழுந்து இறந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், அவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.