அவிநாசி அருகே அடையாளம் தெரியாத நபர் அடித்துக் கொலை!
அடையாளம் தெரியாத நபர் கொல்லப்பட்டது தொடர்பாக..
அவிநாசி அருகே சின்னேரிபாளையத்தில் அடையாளம் தெரியாத நபர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சின்னேரிபாளையத்தில் அடையாளம் தெரியாத நபர் கொலை செய்யப்பட்ட நிலையில் இருசக்கர வாகனத்துடன் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், அங்குக் கல்லால் அடித்து முகங்கள் சிதைந்த நிலையில் 55 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும், அவரை மர்ம நபர்கள் தலையில் கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளதும் தெரிய வந்தது.
மேலும் அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் , கொலைக்கான காரணம் உள்ளிட்டவை குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் உடலைக் கைப்பற்றி, சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.