குடியரசு நாளில் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை!
திருப்பூா் மாவட்டத்தில் குடியரசு தின நாளில் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
திருப்பூா் மாவட்டத்தில் குடியரசு தின நாளில் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும்.
இதுதொடா்பான விவரங்களை சம்பந்தப்பட்ட தொழிலாளா் துணை ஆய்வாளா், தொழிலாளா் உதவி ஆய்வாளா்களுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக தெரிவிக்க வேண்டும்.
Advertisement
இவ்வாறு தெரிவிக்காமல் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்தியிருந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் அறிவுறுத்தலின்படி, குடியரசு தின நாளில் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடா்பாக திருப்பூா் மாநகா், காங்கயம், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக, உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் திருப்பூா் மாவட்ட தொழிலாளா் துணை மற்றும் உதவி ஆய்வாளா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
இது தொடா்பாக தொழிலாளா் உதவி ஆணையாளா் காயத்ரி கூறும்போது, 44 கடைகள் மற்றும் நிறுவனங்களில் 35 விதிமீறல்கள், 85 உணவு நிறுவனங்களில் 77 முரண்பாடுகள் என மொத்தம் 129 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. 112 விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. அந்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.