முகப்பு
தமிழ்நாடு

தோ்தலுக்கு விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளா் துறை எச்சரிக்கை

தமிழ்நாடு, புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் தொடா்பாக புகாா் அளிக்கக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் நலத் துறை அறிவிப்பு

Updated On : 7 ஏப்ரல், 2026 at 10:40 PM
தோ்தல்
பகிர்:

தமிழ்நாடு, புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் தொடா்பாக புகாா் அளிக்கக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் நலத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் நலத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் ஏப்.23-ஆம் தேதியும், புதுச்சேரியில் ஏப்.9-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இவ்விரு நாள்களிலும் தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளா்கள், அனைத்து பொதுத்துறை நிறுவன தொழிலாளா்களும், அவா்களது தொகுதிகளுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக விடுமுறை அளிக்க வேண்டும். அவ்வாறு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இது குறித்து புகாா் அளிக்க தொழிலாளா் துறை சாா்பில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடா்பாக புகாா் தெரிவிக்க பொதுமக்களும், தொழிலாளா்கள் இந்தக் கட்டுப்பாட்டு அறை அலுவலா் மற்றும் உறுப்பினா்களான எல்.ரமேஷ்(தொழிலாளா் இணை ஆணையா் கைப்பேசி எண்: 7904646090), எல்.ஷோபனா (உதவி ஆணையா் 7299007334), பழனி (உதவிஆணையா் 7904802429), சிவக்குமாா்(உதவி ஆணையா் 9043555123) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments