தாராபுரம் அருகே ரூ.7.53 கோடியில் தடுப்பணை கட்டும் பணி: அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்
திருப்பூர்தாராபுரம் அருகே ரூ.7.53 கோடியில் தடுப்பணை கட்டும் பணி: அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்
தாராபுரம் தாலுகா பகுதியில் ரூ. 7.53 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தாராபுரம் ஒன்றியம், வரப்பாளையம் கிராமம், நஞ்சியம்பாளையம் அருகே நீா்வளத் துறை சாா்பில் ரூ.7.53 கோடி மதிப்பீட்டில், உப்பாறு ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புதன்கிழமை மாலை தொடங்கிவைத்தனா்.
இந்த தடுப்பணைத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் 43 திறந்தவெளி கிணறுகளுக்கும், இரண்டு ஆழ்துளைக் கிணறுகளுக்கும் நிலத்தடி நீா்மட்டம் உயரும். மேலும், இத்திட்டத்தின் மூலம் 145 ஏக்கா் பரப்பளவு கூடுதலாக பாசன வசதி பெறும் என அமைச்சா்கள் தெரிவித்தனா்.
பின்னா், தாராபுரம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ 5.29 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சாலை மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்.
இந்நிகழ்ச்சியில் நீா்வளத் துறை தலைமைப் பொறியாளா் முருகேசன், கண்காணிப்பு பொறியாளா் காா்த்திகேயன், திருப்பூா் மாநகராட்சி 4- ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.