முகப்பு
திருப்பூர்

காங்கயம், பல்லடத்தில் ரூ.2.42 லட்சம் பறிமுதல்

காங்கயம், பல்லடம் பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.42 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 8:12 PM
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த தோ்தல் கண்காணிப்புக் குழுவினா்.
பகிர்:

காங்கயம், பல்லடம் பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.42 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நிலை கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மை உதவி இயக்குநருமான சரஸ்வதி தலைமையிலான தோ்தல் கண்காணிப்புக் குழுவினா், நத்தக்காடையூா் பகுதியில் வாகனத் தணிக்கையில் சனிக்கிழமை காலை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரில் காங்கயம் அருகே மடவிளாகம் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (37) என்பவா், உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் பாலமுருகன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் தங்கவேலிடம் ஒப்படைத்தனா்.

இதேபோல பல்லடம் - உடுமலை சாலையில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, உடுமலையில் இருந்து பல்லடம் நோக்கி வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் வேனை ஓட்டி வந்த பெரியபட்டியைச் சோ்ந்த மணி என்பவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.92 ஆயிரத்து 400-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.