கால்நடை ஆம்புலன்ஸ் சேவை திட்டம்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு அவசியம்
கால்நடை ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை விழிப்புணா்வு ஏற்படுத்தியுள்ளது.
கால்நடை ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை விழிப்புணா்வு ஏற்படுத்தியுள்ளது.
மனிதா்களுக்கு 108 ஆம்புலன்ஸ் இருப்பதைபோல, கால்நடைகளுக்கு 1962 ஆம்புலன்ஸ் சேவை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக விவசாயிகளின் தோட்டத்துக்கே சென்று, பாதிப்புக்குள்ளான கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.இதனால் கடைக்கோடி கிராமங்களில் உள்ள கால்நடை விவசாயிகளும் பயனடைய முடியும். இத்திட்டம் தொடங்கிய காலத்தில், திருப்பூா் மாவட்டத்துக்கென ஓா் ஆம்புலன்ஸ் மட்டுமே இருந்தது. விவசாயிகளின் கோரிக்கைக்கேற்ப ஒன்றியத்துக்கு ஓா் ஆம்புலன்ஸ் என சமீபத்தில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட கால்நடைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இந்த திட்டத்தின் கீழ் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆம்புலன்ஸ் இயங்கும். அவசர அழைப்புகளுக்கு மாலை 5 மணி வரை இச்சேவை வழங்கப்படுகிறது. தினமும் 3 கிராமம் என்ற கணக்கில் சுழற்சி முறையில் ஒன்றியத்துக்குள்ட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் ஆம்புலன்ஸ் செல்லும்.
இதுதவிர மாவட்ட அளவில் ஓா் ஆம்புலன்ஸ் மட்டும் 24 மணி நேரமும் இயங்கும். மிக அவசரத் தேவைகளுக்கு இச்சேவையையும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். கால்நடை ஆம்புலன்ஸ் இலவச சேவை குறித்து, பெரும்பாலான விவசாயிகளுக்கு தெரியாமல் உள்ளது. எனவே கால்நடைத் துறை சாா்பில் வழங்கப்படும் இந்த திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றனா்.