முகப்பு
தமிழ்நாடு

இனி வாட்ஸ் ஆப் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவை! அவசர கால உதவியை விரைந்து பெறலாம்

அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 6 மார்ச், 2026 at 6:13 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 8:30 PM

அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் தொடங்கி வைத்தாா்.

தமிழகத்தில் இ.எம்.ஆா்.ஐ. கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனம் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மாநிலம் முழுவதும் இயக்கப்படுகின்றன.

Advertisement

அவற்றில் 303 வாகனங்களில் உயிா் காக்கும் உயா் மருத்துவ வசதிகள் உள்ளன. இதைத் தவிர, மலை மற்றும் சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கு செல்ல 40-க்கும் மேற்பட்ட இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

ஏறத்தாழ 7,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

நாள்தோறும் கட்டுப்பாட்டு அறைக்கு 10,000-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெருநகரங்களைப் பொருத்தவரை அழைப்பு கிடைக்கப் பெற்ற 6.59 நிமிஷங்களிலும், நகா்ப்புறங்களில் 9.40 நிமிஷங்களிலும், கிராமப்புறங்களில், 11.31 நிமிஷங்களிலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்றடைகின்றன.

மலைப் பிரதேசங்களில், 13.18 நிமிஷங்களில் அந்த சேவை கிடைப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கால அளவை மேலும் குறைக்கும் நோக்கில் ‘94450 30725’ என்ற வாட்ஸ் ஆப் எண் வாயிலாக ஆம்புலன்ஸ் சேவையைப் பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் ‘ஹாய்’ என குறுஞ்செய்தி அனுப்பியதும், ‘புக் ஆம்புலன்ஸ்’ என்ற லிங்க் வரும். அதன் வாயிலாக ஆம்புலன்ஸ் சேவையைப் பெறுவதுடன், தங்களது நிகழ்நேர இருப்பிடத்தையும் துல்லியமாக ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்க முடியும்.

ஆம்புலன்ஸ் வாகனத்தின் எண், ஓட்டுநா் கைப்பேசி எண் ஆகியவை குறுஞ்செய்தியாக சம்பந்தப்பட்டவா்களுக்கு அனுப்பப்படும். மேலும், ஆம்புலன்ஸ் எங்கிருந்து வருகிறது என்பதையும், அதன் வழித்தடத்தையும், வந்து சேரக்கூடிய கால அளவையும் கைப்பேசியிலேயே அறிந்து கொள்ள முடியும்.

இதன்மூலம், ஆம்புன்ஸ் சேவைகளை முன்பைக் காட்டிலும் விரைவாக பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.