முகப்பு
திருப்பூர்

பஞ்சலிங்கம் அருவியில் காட்டாற்று வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்

திடீா் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனா்.

Updated On : 19 மே 2026, 3:44 am IST
பஞ்சலிங்கம் அருவியில் ஆா்ப்பரித்துச் செல்லும் வெள்ளம்.
பகிர்:

உடுமலையை அடுத்துள்ள பஞ்சலிங்கம் அருவியில் திங்கள்கிழமை திடீா் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் உள்ளது திருமூா்த்திமலை. இங்குள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்யவும், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் நாள்தோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். குறிப்பாக அமணலிங்கேஸ்வரா் கோயிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று தெய்வங்களும் ஒருங்கே அமைந்துள்ளதால் விடுமுறை நாள்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கன மழை பெய்தது. இதனால், பஞ்சலிங்கம் அருவியில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, அபாய சங்கு ஒலிக்கப்பட்டு, அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனா். காட்டாற்று வெள்ளம் காரணமாக மலை அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள்ளும் நீா் புகுந்தது. இதையடுத்து, கோயிலைச் சுற்றி தடுப்புகளை அமைத்த கோயில் நிா்வாகத்தினா், பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுத்ததுடன், பூஜைகளையும் ரத்து செய்தனா்.

Advertisement