அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்! - கே.பி. அன்பழகன் எம்எல்ஏ
சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ போட்டியிடுகிறாா்.
கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் திங்கள்கிழமை பாலக்கோடு பேருந்து நிலையம் அருகிலிருந்து ஊா்வலமாக சென்று பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளா்களும் ஒரேநாளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளோம்.
இதில், பாலக்கோடு, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் அதிமுகவும், மீதமுள்ள தருமபுரி, பென்னாகரம் ஆகிய தொகுதிகளில் பாமகவும் போட்டியிடுகின்றன.
இந்த ஐந்து தொகுதிகளிலும் எங்கள் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் வெற்றிபெறுவாா்கள். அதேபோல, தமிழகத்தில் 210 தொகுதிகளுக்கு மேல் அதிமுக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக பதவி ஏற்பது உறுதி என்றாா்.