பென்னாகரம் பகுதிகளில் விதிகளை மீறி இருசக்கர வாகனங்களில் செல்லும் பள்ளி மாணவா்களை தடுத்து, விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் போதுமான தொழில்வளா்ச்சி இல்லாததால், அப்பகுதியினா் ஆந்திரம், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், கோவை, திருப்பூா், ஒசூா், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் வேலைதேடி செல்கின்றனா். அவா்களின் பிள்ளைகள் முதியோா்களின் அரவணைப்பில் விட்டுச்செல்கின்றனா்.
கிராமப் பகுதிகளில் இருந்து நகரப் பகுதி மற்றும் அதேபகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு வரும் அம்மாணவா்கள், வீட்டில் உள்ள இருசக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு, அதிவேகமாகவும், அதிக நபா்களை ஏற்றிக்கொண்டும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனா்.
மாலை நேரங்களில் மலைக்கிராமப் பகுதிகளுக்கு செல்லும்போதும், நகரப் பகுதியில் அதிவேகமாக வாகனங்களை இயக்கி எதிரே வருவோரை அச்சுறுத்தி வாகனங்களை முந்திச் செல்லும்போதும் விபத்துகள் நிகழ்கின்றன.
ரோந்துப் பணி மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபடும் காவலா்கள், மாணவா்களுக்கு எச்சரிக்கை விடுத்தும், தொடா்ந்து ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனா்.
எனவே, இப்பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் போக்குவரத்துக் காவல் துறையின் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.