தருமபுரி, டிச. 16: முதல்வரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 60 ஆயிரம் வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இத் திட்டத்துக்கு மொத்தம் ரூ.1,080 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் 2011-2012-ம் ஆண்டில் நிறைவேற்றப்படும்.
இத் திட்டத்தில் பயன்பெற குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் பெயரில் பட்டா இருக்க வேண்டும். பயனாளிகளுக்கு அரசு ஒதுக்கியுள்ள ரூ.1.80 லட்சத்தில், ரூ.30 ஆயிரம் சூரிய ஒளி வசதிக்காக தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை வசம் ஒப்படைக்கப்படும்.
இதில், 5 சூரிய ஒளி சிஎப்எல் பல்புகள் அமைத்துத் தரப்படும். மேலும், கட்டுமானப் பணியின்போது இந்த நிதியிலிருந்து வயரிங் இணைப்புகள், ஸ்விட்ச், சூரிய ஒளியை ஈர்க்கும் கருவி உள்ளிட்டவை செய்துதரப்படும். இதற்கு 2 ஆண்டு உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது.
ரூ.1.50 லட்சத்தில் 300 சதுர அடி பரப்பில் வீடுகள் கட்டப்படும். கட்டுமானத்துக்குத் தேவையான சிமென்ட், இரும்புக் கம்பிகள் அரசு நிறுவனம் மூலம் கொள்முதல் செய்து வழங்கப்படும். கதவு, ஜன்னல்களை பயனாளிகளே தேர்வு செய்யலாம். இல்லையெனில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஏற்பாடு செய்யப்படும். அனைத்து வீடுகளும் ஒரே மாதிரி ஒரே அளவில் கட்டப்பட வேண்டும். அறைகளை வேண்டுமெனில் விருப்பம்போல மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
பயனாளிகளில் மாற்றுத் திறனாளிகள், அரவாணிகள், கணவரால் கைவிடப்பட்டோர், விதவையர், எச்ஐவி, எய்ட்ஸ், காசநோய் பாதித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோர் பட்டியலில் விடுபட்டு தகுதியான பயனாளிகளாக இருந்தால் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு விண்ணப்பித்து, உயர் அலுவலர் மூலம் விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியரால் ஒப்புதல் பெற்று இத் திட்டத்தில் பயனாளியாகலாம்.
இப்போது, அனைத்து மாவட்டங்களிலும் ஊராட்சிகள்தோறும் பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. 2 மாதங்களில் பட்டியல் இறுதி செய்யப்பட்டு கட்டுமானப் பணி தொடங்கும். அடுத்த 5 ஆண்டுகளில் 3 லட்சம் பசுமை வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.