2 நாளில் ரூ. 2 கோடியை தாண்டிய பருத்தி விற்பனை
எடப்பாடி. ஜன. 08 கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்க ஏல மார்க்கெட்டில் ஏலத்திற்கு வந்த 25 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ரூ. 2 கோடியே 50 லட்சதுக்கு ஏலம் போனது. இன்னும் இரண்டு நாள் இருக்கும் நிலையில் ஏலத்தொ
எடப்பாடி. ஜன. 08 கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்க ஏல மார்க்கெட்டில் ஏலத்திற்கு வந்த 25 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ரூ. 2 கோடியே 50 லட்சதுக்கு ஏலம் போனது. இன்னும் இரண்டு நாள் இருக்கும் நிலையில் ஏலத்தொகை மேலும் ரூ. 2 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகுந்த விலை கிடைப்பதால் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கிளை கொங்கணாபுரத்தில் உள்ளது. இந்தியாவிலேயே பருத்தி அதிகம் ஏலத்திற்கு வரக்கூடிய கூட்டுறவு சங்கங்களில் திருச்செங்கோடு கூட்டுறவு விற்பனை சங்கம் முன்னனியில் உள்ளது. பருத்தியை வாங்குவதற்கு சேலம், கோயமுத்தூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா போன்ற மாநிலங்களிலிருந்து ஏராளமான வியாபாரிகள் கொங்கணாபுரத்தில் கூடுகின்றனர்.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கொங்கணாபுரம் கிளையில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெறும். பருத்தி வரத்து அதிகம் உள்ள நேரங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் ஏலம் நடைபெறும். மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு பருத்திக்கு கூடுதல் விலை கிடைத்து வந்தது.
இந்நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள் பருத்தி ஏலத்தில் 25 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ஏலத்திற்கு வந்துள்ளது. அதில் பி.டி ரக பருத்தி 100 கிலோ மூட்டை ரூ. 4000 முதல் ரூ. 5800 வரையும், டி.சி.எச் ரக பருத்தி 100 கிலோ மூட்டை ரூ. 5500 முதல் ரூ. 6200 வரையிலும், ஆர்.சி.எச் ரக பருத்தி 100 கிலோ மூட்டை ரூ. 4000 முதல் ரூ. 5000 வரையும் ஏலம் போனது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ. 2 கோடியே 50 லட்சத்துக்கு ஏல விற்பனை நடந்தது. அதிக பருத்தி வரத்தால் வழக்கத்திற்கு மாறாக ஞாயிறு, திங்கட்கிழமையும் ஏலம் நடைபெறும் என கூட்டுறவு விற்பனை சங்க அலுவலர்கள் தெரிவித்தார்கள். இதனால் மேலும் ரூ. 2 கோடி வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் பருத்திக்கு கூடுதல் விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.