முகப்பு
தருமபுரி

குண்டும் குழியுமான சிட்ங் சாலை சீரமைக்கப்படுமா?

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தைச் சேர்ந்த சிட்லிங் பள்ளத்தாக்குப் பகுதிக்குச் செல்லும் குண்டும் குழியுமான வனச் சாலையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோருகின்றனர். 

Updated On : 24 நவம்பர், 2017 at 8:51 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:42 PM

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தைச் சேர்ந்த சிட்லிங் பள்ளத்தாக்குப் பகுதிக்குச் செல்லும் குண்டும் குழியுமான வனச் சாலையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோருகின்றனர். 
கோட்டப்பட்டியிலிருந்து சிட்லிங் வரையிலான இந்த வனச் சாலை 8 கி.மீ. தொலைவிலானது. இருபுறமும் மூங்கில் காடுகள் மண்டிக் கிடக்கும் வனப்பகுதியைக் கடந்தால் மட்டுமே சிட்லிங் பள்ளத்தாக்குப் பகுதியை சென்றடைய
முடியும். வெறுமனே மண் சாலையாக இருந்த இச்சாலை, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் வனப் பொறியியல் துறையால் தார்ச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளாக இச்சாலையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய அளவிலான குழிகள் ஏற்பட்டுள்ளன. அதிகபட்சம் 15 நிமிடங்களுக்குள் கடக்க வேண்டிய இச்சாலையை, தற்போதுள்ள பழுதால் முக்கால் மணி நேரம் ஆனாலும் கடக்க இயலவில்லை என்கின்றனர் சிட்லிங் பொதுமக்கள்.
சேலத்திலிருந்து திருவண்ணாமலைக்கும், அரூரிலிருந்து சிட்லிங் பகுதியிலுள்ள ஏ.கே.தண்டாவுக்கும், சேலத்திலிருந்து அரூருக்கும், அரூரிலிருந்து ஆத்தூருக்கும், ஒசூரிலிருந்து ஆத்தூருக்கும் என 5 அரசுப் பேருந்துகள் இந்த வழித்தடத்தில் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகின்றன.
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் சிட்லிங்கை விட்டு வெளியே வந்துதான் பள்ளிக்கு செல்ல வேண்டும். சிட்லிங் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விவசாய விளைபொருள்களை அரூருக்கோ, தருமபுரிக்கோ கொண்டு செல்ல வேண்டுமானால் இந்தச் சாலையைக் கடக்க வேண்டும்.
எனவே, முக்கியத்துவம் உள்ள இச்சாலையை வனப் பொறியியல் துறையினர் விரைவில் சீரமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோருகின்றனர்.
இதுகுறித்து கோட்டப்பட்டி வனச் சரகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் கூறியது: கோட்டப்பட்டி-சிட்லிங் சாலையிலுள்ள பழுதை சீரமைப்பது தொடர்பாக திருச்சியிலுள்ள வனப் பொறியியல் துறை அலுவலகத்துக்கு அவ்வப்போது கடிதம் அனுப்பி வருகிறோம்.
தற்போது இச்சாலையை நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றித் தரக் கோரி வனத் துறைக்கு கடிதம் வந்துள்ளது. இதற்கான முன்மொழிவுகள், கருத்துருக்கள் சென்னையிலுள்ள தலைமை வனப் பாதுகாவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 
வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்கள், செயலர்கள் நிலையில் நடைபெற வேண்டிய பணி இது என்கின்றனர்.
சாலையை சீரமைக்க வேண்டிய முக்கியத்துவம் கருதி, மாவட்ட நிர்வாகம் இதற்கான முயற்சியை பிரத்யேகமாக கவனித்தால் சிட்லிங் மக்கள் போக்குவரத்து சிக்கலில் இருந்து விரைவில் மீண்டு வரலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.