கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு: நடவடிக்கை கோரி பா.ம.க. மனு
தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாட்டாளி மக்கள்
தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சியினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழியிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில துணை பொதுச் செயலர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமையில் பாமக நிர்வாகிகள் அளித்த மனு: தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் கூட்டுறவு சங்கத் தேர்தலில் முதல்கட்ட வேட்புமனு தாக்கல் மார்ச் 26-ஆம் தேதி தொடங்கியது. இதில் பாளையம்புதூர், சின்னம்பள்ளி, காளப்பனஅள்ளி, வண்ணாத்திப்பட்டி, பாலஜங்கமனஅள்ளி, ஆச்சாரஅள்ளி, பி.செட்டிஅள்ளி, மாரண்டஹள்ளி ஆகிய கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்திலும் அனைத்துக் கட்சியைச் சார்ந்த கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், அதிமுகவினரின் 11 வேட்பு மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டதாகவும், மற்றவை தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டு, மார்ச் 27-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குமேல் காவல்துறை அதிகாரிகள் உதவியோடு பட்டியல் ஒட்டப்பட்டது. தகுதி வாய்ந்த வேட்பு மனுக்கள் வேண்டுமென்றே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
எனவே, கூட்டுறவு சங்கத் தேர்தலில் நடைபெறும் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுத்து, தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களை ஏற்று தேர்தல் நடத்த வேண்டும்.