ஒகேனக்கல்லில் பிரதான அருவிக்கு செல்லும் பாதையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இரும்புத் தடுப்பு கம்பிகள் அமைக்க, வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஒகேனக்கல்லுக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி வரை தங்களது வாகனங்களில் சென்று வந்தனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு தங்கும் விடுதியின் அருகில் பிரதான அருவிக்குச் செல்லும் பாதையில் இரும்புத் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், பிரதான அருவிக்குச் செல்லும் சாலையில் இரும்புத் தடுப்பு கம்பிகள் அமைப்பதால், வியாபாரிகள், உள்ளூர்வாசிகள், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.எனவே மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து பிரதான அருவிக்கு செல்லும் சாலையில் இரும்புத் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்றார்.