இளம் வயது திருமணம்: சிறுமி மீட்பு
மாரண்டஅள்ளி அருகே 15 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமியை சைல்டுலைன் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.
மாரண்டஅள்ளி அருகே 15 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமியை சைல்டுலைன் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.
மாரண்டஅள்ளி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது நிரம்பிய பெங்களூரில் கூலித் தொழில் செய்து வருவபவருக்கும் கடந்த 10 நாள்களுக்கு முன்பு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் தருமபுரி மாவட்ட சைல்டுலைன் அமைப்புக்கு 1098 எண் மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சைல்டுலைன் பணியாளர் இளவரசி, கிராம உதவியாளர் மல்லிகா, சிறார் குழும உறுப்பினர் அம்பிகா ஆகியோரைக் கொண்ட குழு ஞாயிற்றுக்கிழமை அந்த கிராமத்துக்கு நேரில் சென்றது.
அங்கு நடைபெற்ற விசாரணையில் திருமணம் முடிந்த சிறுமிக்கு 15 வயதானதே நிறைவடைந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறுமியை வீட்டில் இருந்து மீட்டு வந்த குழுவினர், சிறார் நலக் குழுமத்தில் ஒப்படைத்தனர். தொடர் விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை பணிக்கு வரும் சமூக நலத் துறை அதிகாரிகள் முன்பு இந்தச் சிறுமி ஆஜர் செய்யப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
ஏற்கெனவே புலிக்கரை அருகேயுள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு சிறார் நலக் குழுமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை விவகாரம்: கிருஷ்ணகிரியில்
ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி, அக்.21: சபரிமலை ஐயப்பன் கோயிலின் ஆகம விதிகளின்படி பெண்களை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி புறநகர்ப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். பூசாரிகள் பேரவையின் நிர்வாகிகள் முருகன், பாபு, துர்கா, சந்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலின் ஆகம விதிகளின்படி பெண்களை அனுமதிக்க கூடாது. ஐயப்ப பக்தர்களைத் தாக்கிய காவலர்களைக் கண்டித்தும், கோயில் ஆகம விதிகளை மீறி கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்களைக் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர்.