தேர்தல் வாக்குப் பதிவு நாளான்று மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக வாக்குச் சாவடி மையங்களில் சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சு.மலர்விழி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களவைத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில், 9,593 மாற்றுத் திறனாளிகள் 812 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாய்வுத் தளப் பாதை மற்றும் 812 சக்கர நாற்காலிகள், உதவிக்காக தன்னார்வலர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு தொகுதிக்கும் 2 வாகனம் மாற்றுத் திறனாளிகளின் போக்குவரத்து வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1950 என்ற எண்ணில் தொடர்புகொண்டு, தங்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடி மற்றும் புகார்கள், சக்கர நாற்காலிகள், வாகனம் தேவைப்படுவோர் தெரியப்படுத்தலாம் என்றார்.