மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தியது.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத் தலைவர் பெரியசாமி தலைமையில் தருமபுரியில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் சின்னக்கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் ரவீந்திரபாரதி பேசினார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மாணவர் நலனுக்கு எதிராக உள்ளது. எனவே, அதனை திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருத திணிப்பு முயற்சியை கைவிட வேண்டும். பாடப் புத்தகங்களில் தமிழின் வரலாற்றை மதிப்பிழக்க செய்யும் நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், வருகிற அக்டோபர் மாதத்தில் மாவட்ட மாநாடு நடத்துவது மற்றும் புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கம் செப்டம்பர் 22-இல் தருமபுரியில் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் மணி, வழக்குரைஞர் மாதையன், மாவட்ட பொருளாளர் நடிகர் சிங்காரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.