பாலக்கோடு அருகே ஜலதிம்மனூர் கிராமத்தில் தண்ணீர் தேடி வந்த 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், விவசாய நிலத்தில் புகுந்து காய்கறிகள், வாழை மரங்களைச் சேதப்படுத்தியுள்ளன.
தற்போது வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வரத் தொடங்கியுள்ளன. பஞ்சப்பள்ளி காப்புக் காட்டில் உள்ள சாமா ஏரிக்கு வந்துள்ள 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஆனந்த குளியல் போட்ட நிலையில், இரவில் உணவுத் தேடி பஞ்சப்பள்ளி அருகே உள்ள ஜலதிம்மனூர் கிராமத்துக்குள் புகுந்த யானைகள், விவசாயிகள் முனியப்பன் மகன் சுரேஷ் (50), கிருஷ்ணன் மனைவி கண்மணி (40), நாகராஜ் மகன் கணேசன் (50) ஆகியோரின் வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளன.
இவற்றின் மதிப்பு ரூ. 7 லட்சம் இருக்கும் என தெரிவித்தனர். மேலும் அருகில் உள்ள தக்காளி,ராகி பயிர்களையும் யானைகள் மிதித்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர். அரசு அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு காட்டுப் பகுதியில் யானைகளுக்கு தண்ணீர்த்தொட்டி ஏற்படுத்தவும், சேதம் அடைந்த விவசாய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.