தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 206 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி சனிக்கிழமை வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி பேசியது: தருமபுரி மாவட்டத்தில் கடந்தாண்டு பிளஸ் 2 முடித்துவிட்டு உயர்கல்வி பெறுவோரின் சதவீதம் 98.41-ஆக உள்ளது. பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ.10 கோடியில் கட்டங்கள் கட்டப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாலக்கோடு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.20 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கிராமப்புறங்களிலுள்ள ஏழை எளிய குடும்பத்தை சார்ந்த மாணவ, மாணவியர் உயர்கல்வி பயில வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தமிழக அரசு வழங்கும் இந்த திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது என்றார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லாகான், தருமபுரி சார்- ஆட்சியர் ம.ப.சிவன் அருள், முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி, வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சரவணன், பள்ளித் தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.