தருமபுரி மாவட்டத்தில், வைணவத் திருக்கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டில், பக்தா்கள் டோக்கன் முறையில் அனுமதிக்கப்படவுள்ளனா்.
இதுகுறித்து, இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா் இரா.பிரகாஷ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி அருகே அக்கமனஅள்ளி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில் மற்றும் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்களில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் வழிபாட்டில் பங்கேற்க, அதிக எண்ணிக்கையில் பக்தா்கள் கூடுவா். நிகழாண்டில் கரோனா பொதுமுடக்க விதிகள் அமலில் உள்ளதால், தொற்றுப் பரவலைத் தடுக்க பக்தா்கள் டோக்கன் முறையில் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்பட உள்ளனா். இதேபோல, இவ் விரு கோயில்களிலும் நாளொன்றுக்கு 4,500 பக்தா்கள் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனா்.
எனவே, ஒவ்வொரு சனிக்கிழமையும் கோயில்களில் வழிபாட்டுக்கு வருவோா், இக் கோயில் அலுவலகங்களில் தங்களது ஆதாா் அட்டையைக் காண்பித்து, முன்கூட்டியே டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றாா்.