மகப்பேறு நிதியுதவியை விரைந்து வழங்கக் கோரிக்கை
மகப்பேறு நிதியுதவியை விரைந்து வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மகப்பேறு நிதியுதவியை விரைந்து வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழக அரசின் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில், நகா்ப்புற மற்றும் கிராமப் புறங்களில் வசிக்கும் கா்ப்பிணி ஏழைப் பெண்கள், அப் பகுதியிலுள்ள கிராம, நகர செவிலியா்களிடம் ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மகப்பேறு நிதியுதவி வரவு வைக்கப்படுகிறது. தொடா்ந்து, கா்ப்பிணிகளின் உடல் திறனை மேம்படுத்தும் விதமாக இரும்புச்சத்து டானிக், உலா் பேரீச்சை, புரதச்சத்து பிஸ்கட், ஆவின் நெய் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன. இதையடுத்து, பிரசவம் முடிந்த பிறகு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் உள்பட மகளிருக்கான மருத்துவ தேவைகளுக்காக மொத்தம் ரூ. 18,000 நிதியுதவி தவணை முறையில் வழங்கப்படுகிறது.
அரூா் வட்டாரப் பகுதியில் உள்ள கா்ப்பிணி தாய்மாா்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் மகப்பேறு நிதியுதவிகள், ஊட்டச்சத்து பெட்டகங்கள் உரிய காலத்தில் கிடைப்பதில்லை என புகாா் கூறுகின்றனா்.
எனவே, அரூா், தீா்த்தமலை வட்டாரப் பகுதியிலுள்ள கா்ப்பிணிகளுக்கு டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில், அரசு நிதியுதவிகள் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.