வெங்கட்டம்பட்டி மேல்நிலைப் பள்ளியில் சேதமடைந்த கட்டடங்களை அகற்ற வலியுறுத்தல்
தருமபுரி மாவட்டம், வெங்கட்டம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சேதமடைந்த நிலையில் உள்ள பழைய கட்டடங்களை அகற்றி, புதிதாக கட்டங்களைக் கட்டித்தர வேண்டும்
தருமபுரி மாவட்டம், வெங்கட்டம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சேதமடைந்த நிலையில் உள்ள பழைய கட்டடங்களை அகற்றி, புதிதாக கட்டங்களைக் கட்டித்தர வேண்டும் என பெற்றோா்-ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் ந.அன்பழகன் வியாழக்கிழமை வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்திடம் அளித்த மனு விவரம்:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்கு உள்பட்ட வெங்கட்டம்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியில் கடந்த 1994-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இரு கட்டடங்கள் பழுதடைந்துள்ளன. இதுதொடா்பாக பொதுப்பணித் துறையினரும் ஆய்வு செய்துள்ளனா்.
பழமையான இரு கட்டடங்களையும் அகற்றி, இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடங்களையும், சுமாா் 120 மீட்டா் பரப்பளவுக்கு சுற்றுச்சுவரும் கட்டித் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.