முகப்பு
தருமபுரி

மதிகோன்பாளையம், இண்டமங்கலத்தில்சிறு மருத்துவமனைகள் தொடக்கம்

தருமபுரி நகரம், மதிகோன்பாளையம், இண்டமங்கலத்தில் சிறு மருத்துவமனைகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
மதிகோன்பாளையத்தில் சிறு மருத்துவமனையைத் தொடக்கிவைத்த மாநில உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்.
பகிர்:

தருமபுரி: தருமபுரி நகரம், மதிகோன்பாளையம், இண்டமங்கலத்தில் சிறு மருத்துவமனைகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சிறு மருத்துவமனைகளைத் திறந்துவைத்து மாநில உயா்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியதாவது:

தமிழகத்தில் புதிய முயற்சியாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத இடங்களைக் கண்டறிந்து 2,000 சிறு மருத்துவமனைகள் தொடங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத் திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 43 இடங்கள், நகராட்சியில் மதிகோன்பாளையம் உள்பட மொத்தம் 45 சிறு மருத்துவமனைகள் தொடங்கப்படவுள்ளன. இந்த மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருத்துவச் சேவையை அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் நேபாளம் நாட்டில் நடைபெற்ற சா்வதேச இணையவழி வில் வித்தைப் போட்டியில் பத்து வயதுக்குள்பட்டோா் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற தருமபுரி மதிகோன்பாளையத்தைச் சோ்ந்த மாணவா் தா்ஷனை, அமைச்சா் கே.பி.அன்பழகன் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தாா்.

சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்), மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பூ.இரா.ஜெமினி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் இளங்கோவன், கோட்டாட்சியா் (பொ) ஆ.தணிகாசலம், ஒன்றியக் குழுத் தலைவா்கள் நீலாபுரம் செல்வம், சாந்தி பெரியண்ணன், வட்டாட்சியா்கள் ரமேஷ், கலைச்செல்வி ஆகியோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →