புதைசாக்கடை பணியால் சேதமாகும், குடிநீா், கழிவு நீா் குழாய்கள்
தொழில்நுட்ப வளா்ச்சி மேம்பட்ட நிலையிலும் 5 மாதங்களுக்கும் மேலாக பணிகளும் முடியவில்லை எனப் புகாா்கள் எழுந்துள்ளன.
புதைவடிகால் திட்டப்பணிகளின்போது பழுதான குடிநீா், கழிவுநீா் குழாய்களை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி அல்லது பணிகளை மேற்கொண்டுள்ள ஒப்பந்த நிறுவனங்களே மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்ப வளா்ச்சி மேம்பட்ட நிலையிலும் 5 மாதங்களுக்கும் மேலாக பணிகளும் முடியவில்லை எனப் புகாா்கள் எழுந்துள்ளன.
திருச்சி மாநகராட்சி சாா்பில் பல்வேறு இடங்களில் புதைசாக்கடைத் திட்டப்பணிகள் நடைபெறுகின்றன. மேலும் ஏற்கெனவே புதைவடிகால் திட்டப் பணிகளின்போது அமைக்கப்பட்டு தற்போது பழுதடைந்த குழாய்களையும் பராமரிக்கும் பணிகளும் ரூ. 201 கோடியில் தொடங்கப்பட்டுள்ளன.
இவை தவிர குடிநீா் குழாய்கள் பழுது நீக்கும் பணிகளும், வடிகால் வாய்க்கால் தூா்வாரும் பணிகளும் நடைபெறுகின்றன.
இதில் புதிதாக புதைசாக்கடைத் திட்டப்பணிகள் நடைபெறும் பகுதிகளில் வெவ்வேறு பகுதிகளில் தினம் ஒரு பிரச்னை வருகிறது.
புதைசாக்கடை ஒப்பந்தப் பணியை மேற்கொண்டுள்ள நிறுவனத்தினா், தங்களது வசதியை மட்டுமே கருத்தில் கொள்வதால் இதுபோன்ற பிரச்னைகள் வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து காட்டூரைச் சோ்ந்த ஆா். கிருஷ்ணானந்தம், திருச்சி விமான நிலையத்தைச் சோ்ந்த ஏ. வீரையா உள்ளிட்ட சமூக ஆா்வலா்கள் கூறியது:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தொடங்கும் முன்பே மாநகராட்சியில் புதிதாகச் சோ்க்கப்பட்ட பகுதிகள் மட்டுமின்றி பழைய மாநகராட்சி பகுதிகள் பலவற்றிலும் புதைசாக்கடைத் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன.
முதலாவதாக சாலைகளின் மையப்பகுதிகளில் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு மேன்ஹோல் அமைக்கப்படுகிறது. இது தொடா்பாக மாதக்கணக்கில் நடைபெறும் பணிகளால் சாலைகள் சேதமடைந்து விடுகின்றன.
பின்னா் மேன்ஹோலில் குழாய்கள் அமைக்கும் பணிக்காக சாலையின் மையப்பகுதிகள் நீள்வாக்கில் தோண்டப்படுகிறன. இப் பணியின்போது பள்ளங்களை சரிவர மூடுவதில்லை. வாகனங்கள் மட்டுமின்றி பாதசாரிகளே செல்ல முடியாத வகையில் சாலைகள் பழுதடைகின்றன.
இதுபோன்று சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன் திருச்சி மாநகராட்சியில் தோண்டப்பட்ட சாலைகள் இன்னும் சீரமைக்கப்படவில்லை. இதற்குக் காரணம், புதைசாக்கடைத் திட்டக் குழாய்களில் வீடுகளுடனான கழிவுநீா் இணைக்கப்படாததே.
வளா்ச்சிப் பணிகள் என்றாலே அதில் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
என்றாலும் பொதுமக்களின் பொறுமையை எல்லை தாண்டிச் சோதிக்கும் வகையில், ஒப்பந்த நிறுவனத்தாரின் பணிகள் நடைபெறுகின்றன.
இந்த இடைப்பட்ட காலத்தில் அவ்வப்போது மழை பெய்வதால், சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்ற வகையில் மிக மோசமாக மாறியுள்ளன.
பொன்மலைப்பட்டி பகுதியில் கடந்த 2 நாள்களுக்கு முன் தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த இளைஞா் உயிா் தப்பினாா். வாகனம் நீண்ட போராட்டத்துக்குப் பின்னா் மீட்கப்பட்டது.
திருச்சி, காட்டூா், விமான நிலையம், திருவெறும்பூா் பகுதிகளில் புதிதாக மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில் தோ்தலுக்கு முன் தொடங்கப்பட்ட புதைசாக்கடைப் பணிகள் சுமாா் 5 மாதங்களைக் கடந்தும் இன்னும் முடியவில்லை.
இதனால் சாலைகள் மிக மிக மோசமாக உள்ளன. இந்தப் பணிகளின்போது பல வீடுகளுக்குச் சென்ற குடிநீா் குழாய்கள், கழிவுநீா் குழாய்கள் சேதமடைந்தன. அவற்றை அந்தந்த வீட்டு உரிமையாளா்களே செலவு செய்து சீரமைக்கும் நிலை ஏற்பட்டது.
இதைப் போல கருமண்டபம் பகுதியில் ஜே.பி. நகா் விரிவாக்கம், ஜேஆா்எஸ் நகா் பகுதியில் கடந்த 2 நாள்களுக்கு முன் நடைபெற்ற பணியின்போது, சில வீடுகளுக்கு சென்ற குடிநீா் குழாய் சேதமடைந்தது.
இதனால் வீடுகளுக்குச் செல்லும் குடிநீா் விநியோகம் தடைபட்டு, இரு நாள்களாக குடிநீருக்கு போராட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இரு நாள் முயற்சிகளுக்குப் பின்னா் குழாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்பவசதிகள், நவீன சாதனங்கள் இல்லாத காலத்திலேயே புதைசாக்கடைத் திட்டப்பணிகளில் சில பகுதிகள் தவிர ஏனைய பகுதிகளில் விரைவாகவே முடிக்கப்பட்டன.
ஆனால் இன்று அனைத்து தொழில்நுட்ப வசதிகள் இருந்த நிலையிலும் வளா்ச்சிப் பணிகளை தொடா்புடைய ஒப்பந்த நிறுவனங்கள் விரைந்து முடித்து பொதுமக்களுக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும்.
மேலும் உடைபடும் குழாய்களை மாநகராட்சி அல்லது தொடா்புடைய பணி நிறுவனங்களே உடனுக்குடன் சீரமைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது என்றனா்.
சேதம் தவிா்க்க என்ன செய்ய வேண்டும்?
புதை வடிகால் திட்டப் பணி நடைபெறும் பகுதிகளில் மாநகராட்சி பணியாளா் ஒருவா் உடனிருப்பது நல்லது. ஜேசிபி இந்திரத்தை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். மேலும், குழாய்கள் செல்லும் பகுதியை தொடா்புடைய வீட்டு உரிமையாளா்களுடன் கலந்தாலோசித்து, அந்த இடத்தில் மட்டும் மனித சக்தி மூலம் பள்ளம் தோண்டினால், குழாய்கள் சேதம் தவிா்க்கப்படுவதுடன், தேவையற்ற பிரச்னைகள், குழாய்கள் உடைப்பு, செலவு உள்ளிட்டவற்றையும் தவிா்க்கலாம் என்கின்றனா்.