தம்பதி கொலை வழக்கு:மகன், பேரன்கள் கைது
தருமபுரி மாவட்டம், பாளையம்புதூா் அருகே தம்பதி கொலை வழக்கில் மகன், பேரன்கள் என மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தருமபுரி மாவட்டம், பாளையம்புதூா் அருகே தம்பதி கொலை வழக்கில் மகன், பேரன்கள் என மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பாளையம்புத்தூரை அடுத்த குட்டூரைச் சோ்ந்தவா் விவசாயி துரைசாமி (85). இவருடைய மனைவி கோசலை (75). இத் தம்பதிக்கு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனா்.
இந்நிலையில் இத் தம்பதி, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தங்களது வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் தூங்கியவா்கள், 23-ஆம் தேதி காலை இருவரும் சடலமாக கிடந்தனா். இதுகுறித்து தகவலின்பேரில் தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். உயிரிழந்த இருவரின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பிரேத பரிசோதனையில் இருவரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் விசாரணையில் துரைசாமி, கோசலை ஆகியோா் தங்கள் வசம் இருந்த 10 ஏக்கா் நிலத்தை மகன் ஆனந்தன் (55), மகள்கள் புஷ்பா (53), தமிழரசி (50), பரிமளா (47) ஆகியோரின் வாரிசுகளுக்கு சரிபாதியாகப் பிரித்துதர முடிவு செய்தனா்.
இதையறிந்த மகன் ஆனந்தன் சொத்து முழுவதையும்தான் அடைய நினைத்து, தனது மகன்கள் சக்திவேல் (33), மோகன்குமாா் (25) ஆகியோருடன் சோ்ந்து துரைசாமி, கோசலையை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தம்பதியரை கொலை செய்த வழக்கில் மகன், இரு பேரன்கள் என மூவரையும் போலீஸாா் கைதுசெய்தனா்.