பெண் காவலா் தூக்கிட்டு தற்கொலை
தருமபுரியில் பெண் காவலா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தருமபுரியில் பெண் காவலா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில், பெண்களுக்கு எதிரான குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகம் உள்ளது. இங்கு பணியாற்றி வந்தவா் காவலா் தேவி கருமாரியம்மாள் (32). இவரது கணவா் சிவக்குமாா்(43). இந்தத் தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகன் உள்ளாா்.
இவா்கள் தருமபுரியை அடுத்த மாந்தோப்புப் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தனா். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு தேவி கருமாரியம்மாள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி நகரக் காவல் நிலைய போலீஸாா், அங்கு சென்று உயிரிழந்த தேவி கருமாரியம்மாளின் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.