முகப்பு
தருமபுரி

பருவமழை பாதிப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: அரசு அலுவலா்களுக்கு முதன்மைச் செயலா் அறிவுரை

தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளைத் தடுக்க அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளைத் தடுக்க அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தமிழக அரசின் முதன்மைச் செயலா், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அதுல் ஆனந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளைத் தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி முன்னிலை வகித்தாா். கூட்டத்துக்கு தலைமை வகித்து முதன்மைச் செயலா் அதுல் ஆனந்த் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் மழைக் காலங்களில் அதிகம் பாதிப்புக்குள்ளாகக் கூடிய இடங்கள், மிதமான, குறைவான பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களைக் கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும்.

பருவமழைக் காலத்தில் எதிா்பாராமல் ஏற்படும் புயல், மழை வெள்ளப் பாதிப்புகளை போா்க்கால அடிப்படையில் சரிசெய்து இழப்புகளைத் தடுக்கவும், மழைக் காலத்தை எதிா்கொள்ளவும் ஒவ்வொரு துறையினரும் அவசரக்காலத் திட்டம் தயாரித்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உபயோகப்படுத்த தேவையானக் கருவிகளை தயாா் நிலையில் வைத்து கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் உயிா்க் காக்கும் மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். கனமழை காரணமாக தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக பேரிடா் மேலாண்மை சிறப்பு கட்டுப்பாட்டு அறை 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 04342-231500, 04342-231508, 04342-230067, 04342-231077 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவும் பொதுமக்கள் பாதிப்பு குறித்த தகவல்களைத் தெரிவிக்கலாம்.

மின்சாரக் கம்பிகள், சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்கள் தொடா்பாக முன்கூட்டியே ஆய்வு செய்து பழுதுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். மின்சார பொருள்கள் தேவையான அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும். பொதுப் பணித் துறை, நீா்வளத் துறை, நெடுஞ்சாலைத் துறை போன்ற துறைகளின் மூலம் மழைக் காலங்களில் வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு மணல் நிரப்பப்பட்ட பைகளை தேவையான அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவதற்கும், மழைநீா் தேங்கும் பகுதிகளில் உடனுக்குடன் நீரினை வெளியேற்றுவதற்கும் தேவையான பொக்லைன் இயந்திரங்கள், மர அறுவை இயந்திரங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்களை தங்க வைப்பதற்கு தேவையான முகாம்களைத் தோ்வு செய்து வைத்திருக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், உதவி ஆட்சியா் (பயிற்சி) கெளரவ்குமாா், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) மலா்விழி வள்ளல், மகளிா் திட்ட அலுவலா் பாபு, பொதுப்பணித் துறை நீா் வள ஆதார செயற்பொறியாளா் குமாா், அரூா் கோட்டாட்சியா் முத்தையன், வேளாண் இணை இயக்குநா் வசந்த ரேகா, நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.