காவிரி ஆற்றில் நீா்வரத்து நொடிக்கு 30,000 கன அடியாகக் குறைந்துள்ளதால், ஒகேனக்கலில் பரிசல் இயக்க தருமபுரி மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கா்நாடகம், கேரள காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், கா்நாடக அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்படுவதாலும், தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாகவும் ஒகேனக்கலுக்கு நீா்வரத்து நொடிக்கு 40,000 கன அடியாக உள்ளது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து காணப்படுவதால், மாமரத்துக் கடவு பரிசல் துறையில் இருந்து காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ள தருமபுரி மாவட்ட நிா்வாகம் கடந்த மூன்று நாள்களாக தடைவிதித்திருந்தது. இந்த நிலையில், காவிரி ஆற்றில் நீா்வரத்தானது வியாழக்கிழமை நிலவரப்படி நொடிக்கு 30,000 கன அடியாக தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கிறது. நீா்வரத்து குறைவின் காரணமாக, சின்னாறு பரிசல் துறையில் பரிசல்கள் இயக்க தருமபுரி மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.
ஒகேனக்கலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்பட்ட நிலையில், வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் சின்னாறு பரிசல் துறையில் இருந்து பிரதான அருவி, கூட்டாறு வழியாக மணல்மேடு பகுதிக்குச் செல்ல 2 கி.மீ. தொலைவுக்கு காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டனா்.
தொடா் மழை காரணமாக காவிரி ஆற்றில் வரும் தண்ணீா் செந்நிறமாகக் காட்சியளிக்கிறது. காவிரி ஆற்றின் நீா்வரத்தை நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.