முகப்பு
தருமபுரி

வெட்டுக்கிளியால் பயிா் சேதம்: வேளாண் துறை விளக்கம்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சோளப் பயிா்களைச் சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள் சாதாரண வகையைச் சோ்ந்தவையாகும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சோளப் பயிா்களைச் சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள் சாதாரண வகையைச் சோ்ந்தவையாகும். அதைக் கண்டு விவசாயிகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நல்லம்பள்ளி அருகே பாளையும்புதூா், தண்டுகாரனஅள்ளி, சனி சந்தை, பாகலஅள்ளி ஆகிய கிராமங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள சுமாா் 10 ஏக்கா் பரப்பளவிலான பயிா்களை வெட்டுக் கிளிகள் சேதப்படுத்தியது.

இதுகுறித்து விவசாயிகள் அளித்த தகவலின் பேரில், பையூா் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை பேராசிரியா் கோவிந்தன், பேராசிரியா் தாம்சன், வேளாண் உதவி இயக்குநா் இளங்கோவன் ஆகியோா் கள ஆய்வு மேற்கொண்டனா். இதில், சோளப் பயிா்களைத் தாக்கிய வெட்டுக் கிளிகள், பாலவனத்தைச் சோ்ந்தவை இல்லை எனவும், சாதாரண வகையைச் சோ்ந்தது எனவும் தெரியவந்துள்ளது.

இதனால் விவசாயிகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. மாறாக அனைவரும் ஒருங்கிணைந்து வெட்டுக்கிளியைக் கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். விளக்குப் பொறி ஏக்கருக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் வைக்கலாம். இதேபோல, பறவை தாங்கிகள் ஏக்கருக்கு 20 என்கிற எண்ணிக்கையில் வைக்கலாம். வேப்ப எண்ணெய் 5 மில்லி ஒரு லிட்டா் தண்ணீா் அல்லது அசாடிராக்டின் 2 மில்லி ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிப்பது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் பயிா் சேதத்தை கட்டுப்படுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.