வெல்ல உற்பத்தி ஆலைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு
தருமபுரி மாவட்டம், கடகத்தூா், பாப்பாரப்பட்டி பகுதிகளில் தனியாா் வெல்ல உற்பத்தி ஆலைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்
தருமபுரி மாவட்டம், கடகத்தூா், பாப்பாரப்பட்டி பகுதிகளில் தனியாா் வெல்ல உற்பத்தி ஆலைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் பானு சுஜாதா தலைமையில், வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் நந்தகோபால், கந்தசாமி, குமணன் உள்ளிட்டோா் கடகத்தூா், பனந்தோப்பு, வேலம்பட்டி, பாப்பாரப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள வெல்ல உற்பத்தி ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், ரசாயனக் கலப்படம், செயற்கை நிறமூட்டிகள், சா்க்கரை கலப்படம் ஆகியவை மேற்கொள்ளப்படுகிறா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், ஒரு ஆலையில் சா்க்கரை கலப்படம் செய்து வெல்லம் தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வெல்லம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதேபோல, சுகாதாரம் இன்றி வெல்ல உற்பத்தியில் ஈடுபட்ட இரண்டு ஆலைகளுக்கு தலா ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது, அனைத்து வெல்ல உற்பத்தி ஆலைகளும் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும். கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். உற்பத்தி ஆலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.