தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசானது ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்தியுள்ளதால், பென்னாகரம் பகுதி கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்தும் வகையில், இரவு நேர பொது முடக்கம், வார இறுதி நாட்களில் கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
அதனடிப்படையில் இரவு நேர பொது முடக்கம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் முழு பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதிகளில் உள்ள மளிகை கடை, சிற்றுண்டி கடை, பழக்கடை, தேனீர் கடைகள், அழகு சாதனப் பொருட்கள் கடைகள், நகைக்கடை, தானிய மண்டிகள், முடிதிருத்தும் நிலையங்கள், உணவகங்கள், காய்கறி கடைகள், தினசரி காய்கறி கடைகள், ஆடையகங்கள் மற்றும் பல்வேறு கடைகள் காலை முதலே அடைக்கப்பட்டன.
இதையும் படிக்க | அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி?
மருந்தகங்கள், சிறு மருத்துவமனைகள் மற்றும் பால் கடைகள் மற்றும் இயங்கின. ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கத்தால் பென்னாகரம், பாப்பாரப்பட்டி, ஏரியூர், பெரும்பாலை உள்ளிட்ட பகுதிகளின் கடைவீதிகள் பகுதி, தருமபுரி, மேச்சேரி, ஒகேனக்கல், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல கூடிய சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் பென்னாகரம் பகுதிகளில் போலீஸார் பொதுமக்களை நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.