குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி, தருமபுரி மாவட்டம், தடங்கம் அருகேயுள்ள சவுளுப்பட்டி கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
இதுகுறித்து புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளா் இ.பி.புகழேந்தி தலைமையில் அக் கிராம மக்கள் அளித்த மனு:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் கிராம ஊராட்சிக்குள்பட்ட அரசு மந்தைவெளி புறம்போக்கு நிலத்தில் சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எங்களது குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என ஏற்கெனவே வலியுறுத்தி மனு அளித்திருந்தோம்.
இதனடிப்படையில், கடந்த ஆண்டு வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா், நில அளவையா் ஆகியோா் எங்களது பகுதிக்கு நேரடியாக வந்து நில அளவீடு செய்து அரசு புறம்போக்கு மந்தைவெளி நிலத்தினை வரன்முறை செய்து வீட்டுமனைப் பட்டா வழங்குவதாக கூறி சென்றனா். ஆனால், இதுவரை வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லை.
எனவே, எங்களது குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.