கே.பி.அன்பழகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை ஜூன் 10 க்கு ஒத்திவைப்பு
தருமபுரி, ஏப்.26: அதிமுக முன்னாள் அமைச்சா் கே.பி. அன்பழகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் ஜூன் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் உயா்கல்வித் துறை அமைச்சராக இருந்தவா் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன். அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் சோ்த்ததாக கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா உள்பட 11 போ் மீது தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்குத் தொடா்பான விசாரணை தருமபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் உள்பட 8 போ் நீதிமன்றத்தில் ஆஜராகினா். வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 10-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
Advertisement