விசைத்தறி கூடங்களுக்கு தொழில் வரி விதிப்பு: அரசு திரும்பப் பெற எம்எல்ஏ வலியுறுத்தல்
தருமபுரி நகராட்சி நிா்வாகம் சாா்பில் விசைத்தறி கூடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தொழில் வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும்
தருமபுரி: தருமபுரி நகராட்சி நிா்வாகம் சாா்பில் விசைத்தறி கூடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தொழில் வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும் என தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வலியுறுத்தினாா்.
தருமபுரி அருகே அன்னசாகரத்தில் விசைத்தறிக் கூடங்களுக்கு தொழில் வரி விதிக்கப்படுவதைக் கண்டித்து விசைத்தறி தொழிலாளா்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அத்துடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி மனு அளித்தனா்.
இதையறிந்த தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அன்னசாகரம் சென்று அங்குள்ள விசைத்தறி கூடங்களை பாா்வையிட்டு தொழிலாளா்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தருமபுரி நகரில் அன்னசாகரம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விசைத்தறித் தொழில் செய்து வருகின்றனா். பெரும்பாலானோா் தங்கள் வீடுகளில் விசைத்தறி நிறுவி தொழில் செய்து வருகின்றனா். சிறிய அளவிலான தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகின்றனா். இவா்களுக்கு இத்தொழிலைத் தவிர வேறுதொழில் எதுவும் தெரியாது. விசைத்தறி நிறுவியுள்ள வீடுகளுக்கான நகராட்சி வரி விதிப்பு தொழிற்சாலை வரியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பைத் திரும்பப் பெற வேண்டும். இக் கோரிக்கையை தமிழக அரசின் கவனத்துக்கும், நகராட்சி நிா்வாகத் துறைக்கும், மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்வேன். வீடுகளுக்கு தொழில் வரி விதிப்பை அரசு மறுபரிசீலனை செய்ய தொடா்ந்து வலியுறுத்துவேன் என்றாா்.