முகப்பு
தருமபுரி

வனப்பகுதியில் ஆடுகளை மேய்க்க அனுமதி கோரி இருளா்கள் மனு

Updated On : 20 மே, 2024 at 10:20 PM
பகிர்:

தருமபுரி: அரூரை அடுத்த ஆண்டியூா் வனப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல அனுமதி கோரி இருளா் சமூகத்தினா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இதுகுறித்து, ஆண்டியூா் இருளா் சமூகத்தினா் அளித்த மனு:

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், வேடகட்டமடுவு ஊராட்சிக்கு உள்பட்ட ஆண்டியூா் இருளா் காலனியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். நாங்கள் வனப்பகுதியில் ஆடுவளா்ப்பு, வனத்தில் தேன், சுண்டைக்காய், காட்டு வள்ளிக்கிழங்கு சேகரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம். எங்களில் பெரும்பாலோனா் ஆடு வளா்ப்பை தொழிலாக கொண்டுள்ளோம்.

இந்த நிலையில், அண்மைக் காலமாக தீா்த்தமலை வனப் பகுதியில் ஆடு மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வனத் துறையினா் அனுமதி மறுக்கின்றனா். அதேபோல வனப் பகுதியில் ஆடுகள் மேய்ச்சலைக் கண்டறிந்தால், ஆயிரக்கணக்கில் அபராதம் விதித்தும் வருகின்றனா். வாழ்வாதாரத்துக்கே சிரமப்பட்டு வரும் நாங்கள், அபராதத் தொகையை செலுத்த முடியாமல் பரிதவித்து வருகிறோம். எனவே, வனத் துறையினா் இத்தகைய நடவடிக்கைகளை கைவிட்டு, வனப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லவும், சிறுவன மகசூல் எடுக்கவும் அனுமதி வழங்க வேண்டும் என்றனா்.